பதின்ம வயது தொடர்பதிவுக்கு என்னை இந்தியாவில் இருந்து நண்பன் கிஷோர் கூப்டாக, சவுதி அரேபியாவில் இருந்து அக்பர் கூப்டாக, ஜப்பானில் இருந்து ஜாக்கிசான் கூப்டாக, அமெரிக்காவில் இருந்து சாம் ஆண்டர்சன் கூப்டாக... அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இங்க பயங்கர்ர பிஸ்ஸி..... ஆனா தொடர்பதிவு எழுதியே ஆகணும்னு நச்சு நச்சுங்குறாங்க.... சரி காசா பணமா ஒரு தடவை எழுதி பாத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் (ங்கொய்யால.... வேற எவன்டா கேப்பான்)
பதின்ம வயதை திருப்பி பாத்தா ஏராளமான விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் பல வருடங்கள் ஆகும் என்பதால் பத்தாம் வகுப்பில் நடந்த நிகழ்வை மட்டும் குறிப்பிடுகிறேன்
பத்தாம் வகுப்பு ஆரம்பிக்கும் போதே. எல்லா விசேஷ வீடுகளுக்கும் கூட்டி போவதை நிறுத்தி “கண்ணா இந்த வருசம் பத்தாப்பு ..ஸ்பெசல் க்ளாஸ் இருக்கு அதான் வரலை”ன்னு சொல்லும்போது ஆரம்பிக்கற பரபரப்பு ரிசல்ட் வந்து புஸ்ன்னு போற வரைக்கும் விடாது. அதுவும் வகுப்புல சில மாணவ மாணிக்க கொழுந்துகள் இதை படிக்கலையா. அதை படிக்கலையான்னு கரெக்டா நம்ம படிக்காததையா கேட்டு..நம்மல ’ஙே’ன்னு முழிக்க வைச்சு, அவ்ளோதான் மவனே நீ காலி உன் ப்யூச்சரே முடிஞ்சுதுன்னு கலவரபடுத்தி பாக்குறதுல அதுங்களுக்கு அவ்ளோ ஆனந்தம். குறிப்பா பப்ளிக் எக்ஸாம் அன்னைக்கு கொஸ்டின் பேப்பர் அவுட்ன்னு கிளம்பும் பாருங்க ஒரு புரளி அது நம்ம நல்லா படிச்ச கேள்வி பதிலையையும் மறக்கடிச்சிட்டுதான் அடங்கும். பப்ளிக் எக்ஸாம் எல்லாம் முடிஞ்ச அன்னைக்கு ஈவினிங். ஷோ ரத்னா தியேட்டர்ல படம் பாக்க போன உடனேதான் பீதியே கொஞ்சம் அடங்கியது.
அதுவும் ஒன்னரை மாசம்தான். நாளை பத்தாம்வகுப்பு தேர்வு முடிவு வெளியீடுன்னு செய்தியை பார்த்த்தும் பகீர்ன்னு ஒண்ணு அடி வயித்துல இருந்து கிளம்பி நெஞ்சுகுழிக்கும் தொண்டைகுழிக்கும் நடுவுல நின்னு குபீர்ன்னு பீதியை கிளப்பிட்டு இருக்கும். சரி மறுநாள் மாலை முரசை காலையில் 11 மணிக்கெல்லாம் பிரிண்ட் போட்ருவாங்க நேரே தினத்தந்தி ஆபிஸ் போனா வாங்கிறலாம்னு முடிவு பண்ணி 10 மணிக்கே போய் காத்திருந்தோம் நானும் என் நண்பர்களும். பேப்பர் வந்த உடனே நம்பரை சரிபாக்கும் போது நம்ம நம்பர் கண்ணில் படும் வரைக்கும் இருக்கற டென்ஷன் இருக்கே.. அட.. அதையெல்லாம் வார்த்தையில் விவரிக்க முடியாதுங்க... அதனால அத விட்டுட்டு அடுத்த சீனுக்கு போவோம்..
பத்தாப்பு ஆரம்பிச்சதில் இருந்தே எங்க தெருவுல பயங்கர பரபரப்பு..ஏன்னா அதுக்கு முந்தின இரண்டு வருசமா தெரு பசங்களை விட பொண்ணுங்களே அதிக மார்க் வாங்கியதால் பொண்ணுங்களெல்லாரும் இதைசொல்லியே பசங்களை ஓட்ட ஆரம்பித்தால் அதிக கடுப்புடன் இருந்தார்கள். அதுவும் இந்த வருடம் நானும் என் பக்கத்து வீட்டு பெண்ணும் பத்தாம் வகுப்பு என்பதாலும், அந்த பெண் படிப்பில் சுமார் என்பதாலும் பசங்க சைடில் என்மேல் எதிர்பார்ப்பு அதிகம் இருந்த்து.(இன்னுமா இந்த ஊரு என்ன நம்புது..அவ்வ்வ்.) அதுக்கு ஏத்தது மாதிரி காலாண்டு, அரையாண்டிலெல்லாம் புள்ளிகாரியும் என்னை விட குறைவான மார்க்கே எடுத்த்தால் (யார்ரா ...அது நீ எவ்ளோ மார்க் எடுத்தேன்னு சின்ன புள்ளத்தனமா கேக்குறது) எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியிருந்தது. அதனால ரிசல்ட் வந்த உடனே என்னை விட அவங்கெல்லாம் பயங்கர டென்ஷன் ஆயிட்டாங்க. நானும் எல்லாருக்கும் சாக்லெட் வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஓரு வீடு விடாம வேட்பாளர் ஓட்டு கேக்குற மாதிரி சாக்லெட் குடுத்துகிட்டு இருந்தேன். அப்போ பசங்கெல்லாம் வேகமா ஓடிவந்து அவ இன்னும் யாரு வீட்டுக்கும் சாக்லெட் குடுக்கல... பெயில் ஆயிருக்கலாம்னு அவனவன் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தனர். ஒரு சிலர் வெடி வாங்க ஆள் அனுப்பும் அளவிற்கு இடமே பரபரப்பானது. அன்று முழுவதுமே அவள் யார் வீட்டிற்கும் வந்து சாக்லெட் கொடுக்காத்தால் எனக்கே அவள் மேல் பரிதாபம் பிறந்தது. மறுபடி அவள் நம்பரை எடுத்து செக் பண்ணி பார்த்தால் அவள் பாஸ் ஆயிருக்கிறாள்.
சரி பரிச்சை சரியாக எழுதாத்தால் இருக்கலாம் என எண்ணி கொண்டேன். மறுநாள் மார்க்ஷீட் வாங்க பள்ளிக்கு சென்று வரிசையில் நிக்கும்போது முதல் பத்து பேர்களின் மார்க் பார்த்தால் பார்டரில் தாண்டியிருக்கிறார்கள். “இந்த மார்க்கு பெயிலே ஆயிருக்கலாம்டா” ன்னு ஒருத்தன் அடிச்ச கமெண்டில் என் முந்தைய நாளின் சந்தோஷம் காணாமல் போயிருந்தது. எதிர்பார்த்தது மாதிரியே என்னோட மார்க்கும் சொல்லிக்கற மாதிரி இல்ல. எனக்கு என் மார்க்கை விட என் தெருபையன்களை நினைத்துதான் ரொம்ப பாவமாக இருந்தது. சரி ஆனது ஆச்சு இத எப்பிடி சமாளிக்கறதுன்னு யோசிச்சுகிட்டே வீட்டுக்கு போயாச்சு. வீட்டுகுள்ள போன உடனே நல்லா தூக்கம் வந்திச்சு. சரி கொஞ்சம் படுக்கலாம்னு படுத்து தூங்கி விட்டேன். (எப்பிடிறா இந்த நிலமைலயும் உனக்கு தூக்கம் வருதுன்னு கேக்காதீங்க... அதை கேட்டு ஏற்கனவே நண்பர்கள் எல்லாரும் காறிதுப்பிட்டாங்க) எழுந்து பாத்தால் பக்கத்து வீட்டு மாமாவிடம் அம்மா பேசிட்டு இருந்த்து காதில் விழுந்தது. “பாவம் மார்க் குறைஞ்சிட்டேன்னு வருத்த்துல இருக்கான். நல்லா முயற்சி பண்ணிணான். என்ன பண்ண?” ன்னு சொலுறது காதில விழுந்த உடனே ஊரை சமாளிக்க இதாண்டா ஒரே வழின்னு நினைச்சு நானும் போயி எல்லாருக்குமே மார்க் குறைஞ்சுதான் வந்துருக்கு. வேல்யூயேசன் டஃப்பா இருந்திருக்குன்னு..இல்லேன்னா.....அப்பிடின்னு அளக்க ஆரம்பிச்சேன். அப்போ பாத்து பக்கத்து வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்குள்ள லட்டோட வந்தா....அவள் 450க்கு மேல் மார்க் லட்டு கொடுத்து கொண்டாட வந்திருக்கா.. (என்னா வில்லத்தனம்..) அப்போ அந்த அங்கிள் என்ன பார்த்த பார்வை இருக்கே...இன்னமும் என்னால மறக்க முடியாது. அவள் மற்ற அனைவருக்கும் சாக்லெட்தான் கொடுத்து விட்டு எனக்கு மட்டும் லட்டு கொடுத்த விசயம் பின்னொரு ரகசிய விசாரணையில் தெரிய வந்தது.
பிகு 1
அவள் ஏன் முந்தைய நாள் சாக்லெட் கொடுக்காம மறுநாள் லட்டு கொடுத்தா..இந்த கேள்விக்கான விடை மட்டும் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. உங்க யாருக்காவது தெரியுமா..?
பிகு 2
“ பத்தாப்பு ரிசல்டும் பக்கத்து வீட்டு பிகரும்’” “ அப்பிடின்னு ரைமிங்காதான் முதலில் தலைப்பு வைச்சேன். ஆனா கலாச்சார காவலர்கள் சொம்பை தூக்கிட்டு வந்துருவாங்களே... அப்பிடின்னு பயந்து போயி தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன் என்பதை கம்பெனி மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறது.
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க இருப்பது
கலையரசன் – வடலூரான் என்ற பெயரில் பதிவிட்டு வருகிறார். கலாய்த்தல் & நக்கல் நடைக்கு பெயர் போனவர். என் சிறந்த நண்பர். இதே போன்று ஓரு தொடர்பதிவில் இருந்து தொடரும் நட்பு. ஆனாலும் பலவருடம் பழகியது போன்ற உரிமை. தற்போது பதிவிற்கு சிறிய இடைவெளி கொடுத்திருக்கிறார் ( சீக்கிரம் வாடா..கலை... மற்ற விஷயங்கள் கடந்து போகும்.. இந்த அழைப்பிற்காக நீ இப்போதே எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை...உனக்கு எப்போது எழுத வேண்டும் என தோன்றுகிறதோ..அப்போது எழுது...)
கார்த்திகேயன் – கீதப்பிரியன் எனும் பெயரில் பதிவெழுதி வருகிறார். ஹாலிவுட் பட விமர்சனம்தான் இவரின் பேவரிட். நான் அவ்வளவாக ஆங்கில படங்களை பார்ப்பதில்லை. ஆனாலும் இவர் மற்றும் ஹாலிவுட் பாலாவின் விமர்சனங்களை பார்த்துதான் சில படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். சில படங்களை பார்த்து விட்டு இவரின் விமர்சனங்களை மீண்டும் படிக்க தூண்டும் அளவிற்கு விரிவாக எழுதியிருப்பார் நீங்களும் போய்ப் பாருங்கள்.
திவ்யாஹரி – காதல் ரசம் சொட்டும் கவிதைகளுக்கு சொந்தக்காரர். இவர் கணவர் ஹரியில் மேல் உள்ள அளவில்லா காதலில் எழுதிய வரிகளை பார்க்கும் போது ஹரி கொடுத்து வைத்தவர் எனும் எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். பதிவுலக விமர்சனத்தை நம்பி ஆயிரத்தில் ஓருவன் படம் பார்த்து விட்டு இவர் எழுதிய விமர்சனம் எனக்கும் மிகவும் பிடித்தது. (இவ்ளோ அப்பாவியா ...இவங்க என்று)

