
1990 க்கு முன்னாலான இளையராஜாவின் இசைக்கும் தற்போதைய இளையராஜாவின் இசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.. இத்தனைக்கும் நான் அதி தீவிர இளையராஜா ரசிகன். இப்போதும் என்னுடைய தனிமை பொழுதுகள் பழையராஜாவின் பாடலுடன்தான் கழிகிறது..அதனை கேட்கும் போது தெறிக்கும் உணர்வுகள், ஊசாலாடும் நினைவுகளை வடிக்க வார்த்தைகளை தேடி தோற்று போய்விடடேன். அதிலும் முக்கியமாக 80களில் வந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் அந்தந்த பாடலின் காட்சிகளே மனதிரையில் ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் பல படங்கள் நான் பார்த்ததே இல்லை. பாடல் காட்சிகள் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த பாடலின் வரிகளில் அந்தந்த சூழ்நிலையை அழகாக விளக்கியிருப்பார்கள். அதுவும் ஒரு முக்கிய காரணம்.

அவர் சிம்பொனி அமைத்தாரா..தலைகனம் பிடித்தவரா என்பது பற்றியெல்லாம் அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் என் போன்றவர்களுக்கு அவரை பற்றி தெரிந்ததைவிட அவரின் இசையை பற்றிதான் அதிகம் தெரியும். அவர் எப்படிபட்ட குணத்தை கொண்டவர் என்பது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை.. என்னை பொறுத்த வரை எனக்கு எந்த இசையை பிடிகிறதோ அதை கேட்பேன். அது எந்த இசையமைப்பாளர் அமைத்தது என்றெல்லாம் வரையறையெல்லாம் எனக்கு கிடையாது. எனக்கு பிடித்திருக்கணும் அவ்வளவுதான்..
அந்த வகையில் பார்த்தால் இளையராஜாவின் பழைய பாடல்களில் உள்ள கம்பீரம் அவரின் சமீபத்திய பாடல்களில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய பாடல்கள் சில கேட்கும் போது மனதை கவர்ந்தாலும் தொடர்ந்து என்னால் கேட்க முடியவில்லை. அது ஏன் என்று அலசும் அளவிற்கு எனக்கு இசை ரசனை இல்லாததால். என்க்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறேன். அதில் ரஹ்மான், யுவன், வித்யாசாகர், ஹாரீஸ் என பல பேர் வந்தாலும் இன்னும் பழையராஜாதான் என்னை ரசிக்க வைக்கிறார். இளையராஜா .! பழையராஜாவை மீட்டெடுங்கள்.