Monday, June 28, 2010

சுணங்கிய தேடல்கள்..!!




ஓரு


கிணற்று தவளையின்

கூச்சலைப் போல

என்

இதுவரையிலான வாதங்கள்.. !


தேடல்கள் சுணங்கி

மூளையை துருப்பிடிக்க

வைக்கும் என்னின்

இதுவரையிலான முயற்சியை

மூட்டை கட்டலாமா

என யோசனைகள்

விரிய ஓரு

விடியல் கிட்டுமென நம்பிக்கையுடன்..!!

 

Monday, June 14, 2010

உறங்கத்தான் உன்னினைவு விடுவதில்லை..




வானவில்
வாழ்க்கையொன்று வாழ்ந்தேன்….

வாழ்வின்
அர்த்தம் தெரியாமல்…

உறங்கத்தான்
உன்னினைவு விடுவதில்லை..

சுட்டாலும்
சூரியன் மறைவதில்லை..

எழுதபடாத
என்னிதயத்தில்
வடிக்கபட்ட காவியமே..!!!

என்
வாழ்வின் அர்த்ததை
தெளிய வைத்த ஓவியமே…!!!

காலம்
எழுதிய காதல்பக்கங்களில்
இப்போது நீயும் நானும்…………..

இம்மென்று
சொல் இறுதிவரை
இணை பிரியா திருப்போம்…!!!

இல்லையென்று
சொன்னால்
இடுகாட்டில் தான்என் உறக்கம்……

என்
இறுதிபயணம் இமயத்தில்
அல்ல உன் இதயத்தில்……………!!

என் அஸ்தி
கரையவேண்டியது கங்கையில்
அல்ல உன் கண்ணீரில்…………….!!

இரக்கம்
கொள் உறங்காத
என் இதயம் உன்னருகில்……………….!!!!!!



டிஸ்கி:  இது ஓரு மீள் பதிவு. முன்னாடி பல பேர் இதை கவனிக்காததால் திரும்பவும். நிறைய பேரின் கருத்துக்களை அறிய வேண்டி இப்போது...

Monday, June 7, 2010

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..!!!

கடந்த மாதம் அமீரகத்திலிருந்து கிளம்பும் போதே ஏதோ கல்யாணமாகி போகும் பெண்களை போல கட்டிடம் கட்டாந்தரையெல்லாம் பார்த்து உணர்ச்சிகள் குபீர் குபீர்னு பெருக்கெடுத்துச்சு.. அப்பவே எனக்கு மைல்டா சந்தேகம் வந்துச்சு. ஆனா இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது நான் சந்தேகப்பட்டது சரிதான்னு. சில குடும்ப செளகரிய காரணங்களுக்காக நான் இன்னும் குறைந்தது ஓரு வருடமாவது இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் தீவிரமாக வேலை தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது ( ஐயகோ...!! ) இந்தியாவுல வேலை கிடைச்சா கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் வேலை பாக்க சொல்லுவாய்ங்களேன்னு பயத்தோடயே அப்ளிகேஷன் அனுப்ப ஆரம்பிச்சா.. உடனேயே கால் லெட்டரும் வந்து இண்டர்வ்யூம் சக்ஸஸ் ஆகிடுச்சு (இன்னுமாடா உன்ன இந்த உலகம் நம்புது...அவ்வ்வ்). போஸ்டிங் பெங்களூருன்னு சொன்னாய்ங்க....அங்க கிளைமேட்டும் நல்லா இருக்கும்ங்கறதால நானும் ஓகே சொல்லிட்டேன்.

அப்பிடியே ஓரு பத்து பதினைஞ்சு நாளு ஆகுதுங்க நானும் இங்க பெங்களூரு வந்து....ஹும்... இது வரைக்கும் பெங்களூருல நான் தங்கி இருக்கற வீட்டையே முழுசா சுத்தி பாக்க முடியாத அளவுக்கு வேலை பெண்ட நிமுத்துறாங்க. ஆனா என்னதான் கஷ்டப்பட்டாலும் ஏதோ ஓரு வெள்ளக்காரபயலுக்கு வேலை பாக்காம நம்மூருகாரனுக்குதான் வேலை பாக்குறோம்கற நிம்மதி இருக்கு பாருங்க அது அனுபவிச்சாதாங்க தெரியும். அட...அட...அட....

நட்பின் பலம்



இங்க வந்து வீடு பாக்க ஆரம்பிக்கும் போதுதான் நட்போட பலம் தெரியுது. இங்க நான் என் இரண்டு பள்ளிகால நண்பர்களை குறிப்பிடலேன்னா நன்றி கெட்டவனாயிருவேன். செந்தில், விஜயகுமார் ப்ளஸ் டூவில் என்கூட படித்த நண்பர்கள். சாப்ட்வேர் லையனில் சென்று முறையே AOL, IBM நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பெங்களூரில் அவர்கள் வசிப்பதால் அவர்களை தொடர்பு கொண்டேன். அப்போது நண்பர் விஜயகுமார் டெல்லியில் இருந்தார் ஆனாலும் நண்பர், நண்பரின் நண்பர் என பலரையும் தொடர்பு கொண்டு எனக்கான இடத்தேடலில் மும்முரமாக இடுபட்டார். நன்றி விஜய். பின் கம்பெனி கெஸ்ட் கவுஸில் ஓரு வாரகாலம் தங்க அனுமதி கிடைத்ததும் வீடு தேட நண்பர் செந்தில் வண்டியை எடுத்து வந்து தெரு தெருவாக தேட ஆரம்பித்தார். இறுதியில் ஓரு வீட்டை அமர்த்திவிட்டுதான் ஓய்வெடுத்தார். நன்றி செந்தில். இது போன்ற நண்பர்கள் கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லி கொல்கிறேன்.

என் குடும்ப பிரச்சினை



இப்போ ரெண்டு நாளு முன்னாடிதான் மறுபடி ப்ளாக்கையே ஓப்பன் பண்ணேன். (ஏன்...ஏண்டா... இவ்ளோ நாளு நிம்மதியாதான இருந்தே...) ஆனா ஓப்பன் பண்ணாமலே இருந்துருக்கலாம் நினைக்க வைச்சுடாங்க. அதுவும் முகில் எழுதுகிறார்ங்கற இடுகையை செந்தழில் ரவியின் தளத்தில் படிச்சதும் எனக்குள் பயங்கர அதிர்வை ஏற்படுத்துச்சு. அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப நேரம் ஆச்சு. சந்தன முல்லை அவர்கள் எவ்ளோ பாதிக்க பட்டிருப்பாங்கன்னு அதோட வீரியத்தை எனக்கு உணர்த்தியது முகிலின் எழுத்தை படிக்கும் போதுதான். அதுவரையில் மேலோட்டமாக அந்த விஷயத்தை படித்து கொண்டிருந்தவன் லிங்க் தேடி மூலமும் படிக்க நேர்ந்தது. அந்த பூக்காரி இடுகை படிச்சா நர்சிம் இப்பிடில்லாம் எழுதுவாராங்கற அதிர்ச்சிதான் அதிமாச்சுது. பெண்ணை எதிர் கொள்ள இந்த கேவலமான ஆயுதம்தானா உங்களுக்கு கிடைச்சுது நர்சிம்.

ஆனால் அதை வைச்சு எழுதின மற்றவர்களின் பதிவை படிச்சால் என்னவோ அவங்களோட தனிப்பட்ட பழைய பகையை தீர்த்துக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா இதை ஜாதி ரீதியா பாக்குறவங்க யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் கடும் கண்டங்கள். சந்தன முல்லை அவர்களும் இதை இழுத்து கொண்டு போவதும் எனக்கு சரியாக படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்த உலகில் இதை வைத்து மற்றவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இனிமேல் இது போல நடக்காது என்றோ யாராலும் உறுதியாக கூறமுடியாது. நர்சிம்மை என்ன பண்ண வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும். மற்ற நாட்டாமைகளை உள்ளே விட்டால் அவர்களுடைய தனிப்பட்ட பகை ஆட்களை உள்ளே இழுத்து குட்டையை குழப்பி கொண்டுதான் இருப்பார்கள். ஏனெனில் வினவு லீனா விஷயத்திலும், செந்தழில் ரவி கிருபாநந்தினி மற்றும் கவிதா அவர்கள் விஷயத்திலும் இது போன்ற தவறை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இது குறித்து வாதம் புரிவது எதிர்வாதங்களுக்கு இடமளிக்கிறது. நீங்களும் உங்கள் கணவரும் கலந்து ஆலோசித்து என்ன பண்ண வேண்டுமென்று உங்கள் தளத்தில் குறிப்பிடுங்கள் அதுதான் அடுத்தடுத்த ஆரோக்யமான தீர்வுக்கு வழி வகுக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை உங்களுக்கான முடிவை நான் எடுப்பதாக நீங்கள் கருதினால் மன்னித்து கொள்ளுங்கள்.